பல்கலைக்கழக உப வேந்தர்களுக்கான அறிவித்தல்

பல்கலைக்கழக உப வேந்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

by Staff Writer 08-10-2020 | 2:04 PM
Colombo (News 1st) பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுக்குமாறு அனைத்து உபவேந்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். சில விரிவுரைகளை Online தொழில்நுட்பத்தினூடாக முன்னெடுக்குமாறும் அவர் கூறியுள்ளார். களனி பல்கலைகழகம் கடந்த 04 ஆம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது. COVID - 19 அபாயம் காரணமாக களனி பல்கலைக்கழகம் மற்றும் கம்பஹா விக்ரமாரச்சி ஆயுர்வேத பல்கலைக்கழகம் என்பன மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், இவற்றை தவிர்ந்த வேறு எந்தவொரு பல்கலைக்கழகமும் தற்காலிகமாக மூடப்படவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். எனவே, ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஏற்கனவே நடைமுறையிலுள்ள Online விரிவுரைகளுடன் இணைய முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.