15 கோடி பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயம்

அடுத்த ஆண்டில் உலகம் முழுவதும் 15 கோடி பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயம்

by Bella Dalima 08-10-2020 | 4:18 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக அடுத்த ஆண்டில் உலகம் முழுவதும் 15 கோடி பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக உலக வங்கி நேற்று (07) வௌியிட்ட அறிக்கையில், கொரோனா இவ்வாண்டு கூடுதலாக 8.8 கோடி முதல் 11.5 கோடிக்கும் அதிகமான மக்களை வறுமை நிலைக்குத் தள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 15 கோடியாக உயரும் அபாயம் உள்ளதாகவும் உலகம் முழுவதும் 1.4 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தீவிர வறுமையில் விழக்கூடும் எனவும் உலக வங்கியின் குழுமத் தலைவர் டேவிட் மால்பாஸ் கூறியுள்ளார். ஏற்கெனவே அதிக வறுமை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் மேலும் பல இலட்சம் பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் எனவும் நடுத்தர வருவாய் கொண்ட பல நாடுகளில் கணிசமான மக்கள் அதிக வறுமைக் கோட்டுக்கு கீழே செல்லும் அபாயம் உள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு பிந்தைய வேறுபட்ட பொருளாதாரத்திற்கு உலக நாடுகள் தயாராக வேண்டும் என உலக வங்கியின் குழுமத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.