நிலக்கரி கொள்வனவின் போது 1.1 பில்லியன் ரூபா நட்டம்

2015 இல் நிலக்கரி கொள்வனவின் போது 1.1 பில்லியன் ரூபா நட்டம்: விசாரணைகளில் தெரியவந்துள்ளது

by Staff Writer 07-10-2020 | 7:10 PM
Colombo (News 1st) 2015 ஆம் ஆண்டு நிலக்கரி கொள்வனவிற்காக கேள்விப்பத்திரங்கள் கோரும் போது நிலக்கரியின் அளவு தொடர்பில் குறிப்பிடப்படாமையினால் 1.1 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழுவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன், இலங்கை நிலக்கரி நிறுவனம் நீண்டகால விலைமனுக் கோரல் நடைமுறைகளுக்கு செல்லாமல் கொள்முதல் பொறிமுறைக்கு அப்பால் சென்று குறுகிய கால நடைமுறையின் கீழ் நிலக்கரியைக் கொள்வனவு செய்துள்ளதாகவும் இதன்போது தெரியவந்துள்ளது. இலங்கை நிலக்கரி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி கொள்வனவு தொடர்பிலான விசாரணைகளுக்காக குறித்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கோப் குழுவிற்கு நேற்று (06) அழைக்கப்பட்டிருந்தனர். இந்த விசாரணையின் போதே இந்த விடயம் வௌிக்கொணரப்பட்டுள்ளது. கொள்முதல் குழுவின் செயலாளரை அமைச்சரவை 08 தடவைகள் அழைத்த போதும் அவர் செல்லாது மேலதிக செலயலாளரை அனுப்பியிருந்ததாகவும், இதனால் எடுக்கப்பட்ட முடிவுகள் சட்ட ரீதியானவையா என்பது குறித்த பிரச்சினை இருப்பதாகவும் கோப் குழுவில் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. எனினும், மேலதிக செயலாளரை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் இருப்பதாக விசாரணைக்கு சமூகமளித்திருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக குழுவிற்கு அறிக்கையிடுமாறு கோப் குழுவின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.