ஒரு நாள் சேவை அடையாள அட்டை விநியோகம் இடைநிறுத்தம்

ஒரு நாள் சேவை அடையாள அட்டை விநியோகம் இன்று முதல் இடைநிறுத்தம் 

by Staff Writer 07-10-2020 | 8:20 AM
Colombo (News 1st) ஒரு நாள் சேவையினூடாக தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடைமுறை இன்று (07) முதல் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. இன்று முதல் நாளை மறுதினம் (09) வரை தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒரு நாள் சேவை முன்னெடுக்கப்பட மாட்டாது என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க கூறியுள்ளார். எவ்வாறாயினும், ஆட்பதிவு திணைகளத்தில் முன்னெடுக்கப்படும் சாதாரண சேவைக்கான நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இன்று தொடக்கம் எதிர்வரும் 3 நாட்களுக்கு குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் தலைமை மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு பொது மக்கள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. தமது திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள காலை 08 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையான அலுவலக நேரத்தில் தொலைபேசி ஊடாகவோ அல்லது மின்னஞ்சலூடாகவோ சம்பந்தப்பட்ட பிரிவுடன் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு குடிவரவு, குடியகல்வு திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. இதேவேளை, இன்று முதல் நாளை மறுதினம் வரை மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டிய மற்றும் வேரஹெர அலுவலகங்கள், பொது மக்களுக்காக திறக்கப்பட மாட்டாது என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்