இதுவரை 2,91,105 PCR சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

நாட்டில் இதுவரை 2,91,105 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

by Staff Writer 03-10-2020 | 4:11 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக நாட்டில் இதுவரை 2,91,105 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக COVID-19 தொற்று ஒழிப்பிற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. நேற்று (02) மாத்திரம் 1,730 PCR சோதனைகள் நடத்தப்பட்டதாக அந்த செயலணி குறிப்பிட்டுள்ளது. கந்தக்காடு மற்றும் சேனபுர புனர்வாழ்வு நிலையங்களில் இன்று காலை வரை 650 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, கொரோனா தொற்று காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த 468 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். நாடு திரும்பிய அனைவருக்கும் PCR சோதனைகளை மேற்கொண்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை இராணுவத்தினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்பட்ட 524 பேர் இன்று வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இதுவரை தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 47,542 பேர் கண்காணிப்பு நிலையங்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முப்படையினரால் பராமரிக்கப்படும் 79 கண்காணிப்பு நிலையங்களில் 7,037 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக COVID-19 தொற்று ஒழிப்பிற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இதேவேளை, COVID-19 தொற்றுக்குள்ளான 6 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர். அதற்கமைய, நாட்டில் இதுவரை 3,388 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் 3,245 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 130 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.