by Staff Writer 02-10-2020 | 6:40 PM
Colombo (News 1st) ஹட்டன் - போடைஸ் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்த 51 பேரில் 04 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி மற்றும் கண்டி போதனா வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 51 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 24 பேர் பாடசாலை மாணவர்களாவர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் தலையில் பலத்த காயமேற்பட்ட இருவர் கண்டி போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
எலும்பு முறிவுக்குட்பட்ட இருவர் நாவலப்பிட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கிளங்கன் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
விபத்திற்குள்ளான பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் காயமடைந்து கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக பொலிஸார் கூறினர்.
டயகம நகரிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கிச் சென்ற தனியார் பஸ், போடைஸ் 30 ஏக்கர் பகுதியில் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியது.
வீதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.