சாணக்கியன் உள்ளிட்ட அறுவர் நீதிமன்றில் ஆஜர்; வழக்கிலிருந்து விடுதலை

by Staff Writer 02-10-2020 | 7:09 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய, அவர்கள் 6 பேரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். எனினும், குறித்த வழக்கிலிருந்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேந்திரன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நா.சங்கரப்பிள்ளை ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகினர்.