கட்டான கொள்ளைச் சம்பவம்: 4 சந்தேகநபர்கள் கைது

கட்டான கொள்ளைச் சம்பவம்: 4 சந்தேகநபர்கள் கைது, 7.2 மில்லியன் ரூபா மீட்பு

by Staff Writer 02-10-2020 | 4:01 PM
Colombo (News 1st) கட்டான பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் துப்பாக்கி முனையில் 02 கோடி ரூபா பணம் கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையை அடுத்து 7.2 மில்லியன் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் இன்று காலை அடையாளம் கண்டிருந்தனர். இதனையடுத்து, நான்கு பொலிஸ் குழுக்கள் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. கொள்ளையிட சென்ற போது பயன்படுத்தப்பட்ட காரும், மோட்டார் சைக்கிளும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கம்பஹா, மாவத்தகம, நிக்கவரெட்டிய மற்றும் எப்பாவெல பகுதிகளை சேர்ந்த 30 முதல் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை கட்டான 50 ஏக்கர் பகுதியில் உள்ள வர்த்தகரின் வீட்டினுள் நுழைந்த குழுவொன்று வீட்டில் இருந்தவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி 02 கோடி ரூபா பணத்தையும் நகைகளையும் கொள்ளையிட்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.