எல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர் கைது

மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற எல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர் கைது

by Staff Writer 01-10-2020 | 5:08 PM
Colombo (News 1st) மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற எல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 04 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு, கடமையிலிருந்த வீதி பாதுகாப்பு பொலிஸாரினால் கட்டளையிடப்பட்ட போதிலும் அதனை கருத்திற்கொள்ளாத குறித்த நபர் தொடர்ந்தும் பயணித்துள்ளார். கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீழ்ந்ததுடன், பிரதேச சபை உறுப்பினர் காயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர் மது போதையில் இருந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, எல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினரால் தாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.