20 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான அரசின் புதிய தீர்மானம் 

by Staff Writer 29-09-2020 | 11:49 AM
Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற குழுநிலை கலந்துரையாடலின் போது, புதிய திருத்தங்களை சேர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா உயர் நீதிமன்றத்திற்கு இன்று (29) அறிவித்துள்ளார். 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 39 மனுக்கள் மீதான பரிசீலனை இன்று ஆரம்பமானது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, குழுநிலை கலந்துரையாடலில் அரசாங்கத்தினால் திருத்தங்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறித்து பகிரங்க நீதிமன்றத்தில் சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார். அந்த திருத்தங்கள மனுதாரர் தரப்பினருக்கும் வழங்கப்பட்டதுடன், நீதிமன்ற செயற்பாடுகள் அரை மணித்தியாலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அரசாங்கத்தின் திருத்தங்கள் குறித்து மனுதாரர் தரப்பினரின் மீளாய்விற்கு இந்த காலப்பகுதி ஒதுக்கப்பட்டது.