20 இல் பிரதமருக்கான அதிகாரம் குறையாது

20 ஆவது திருத்தத்தில் பிரதமருக்கான அதிகாரம் குறையாது - மஹிந்த ராஜபக்ஸ

by Staff Writer 29-09-2020 | 9:47 AM
Colombo (News 1st) 

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சியினர் ஒரே நிலைப்பாட்டிலுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்தினூடாக பிரதமருக்கான அதிகாரங்கள் குறையாது எனவும் அதிகாரம் காணப்படுகிறதா?, இல்லையா? என்பது பிரதமரின் கையிலேயே காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே இன்று (29) முற்பகல் பிரதமர் இந்த விடயங்களை கூறியுள்ளார். கெஹெலிய ரம்புக்வெல்ல, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர். 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் இதன்போது பிரதமரிடம் வினவப்பட்டதுடன், இந்த சட்டமூலம் குறித்து ஆளும் கட்சியினர் ஒரே நிலைப்பாட்டிலுள்ளதாக பிரதமர் பதில் வழங்கியுள்ளார். 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி கொள்வதற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை தொடர்பில் சிக்கல் இல்லை எனவும் பிரதமர் கூறியுள்ளார். ​ இதேவேளை, 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் ஆராய்ந்த குழுவின் அறிகையில் பிரதமரும் இணங்குகின்ற பரிந்துரைகளை குழுநிலை சந்தர்ப்பத்தில் திருத்த இணக்கம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.