பாட்டலியின் சாரதி திலும் குமாரவிற்கு பிடியாணை

பாட்டலியின் சாரதி துசித் திலும் குமாரவிற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

by Staff Writer 29-09-2020 | 6:00 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியான துசித் திலும் குமாரவை கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி இரவு, இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. துசித் திலும் குமார, மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகதமையினால், மேல் நீதிமன்ற நீதிபதியால் பிரதிவாதியின் பிணையாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடல்ல மற்றும் துசித் திலும் குமார ஆகியோருக்கு வௌிநாடு செல்ல தடை விதித்த நீதவான், அது தொடர்பில் உடனடியாக குடிவரவு - குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, பிரதிவாதிகள் ஒவ்வொரு மாதமும் முதலாவது வௌ்ளிக்கிழமைகளில் முற்பகல் வேளையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராக வேண்டுமெனவும் தமது கடவுச்சீட்டுகளை மன்றில் ஒப்படைக்குமாறும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், பிரதிவாதிகளுக்கு புதிய கடவுச்சீட்டுகளை வழங்க வேண்டாமெனவும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பிலான விசாரணைகள் நாளை (30) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.