தேங்காய் இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை - வர்த்தக அமைச்சு

by Staff Writer 29-09-2020 | 7:07 AM
Colombo (News 1st) தேங்காய் இறக்குமதிக்கான எவ்வித திட்டமும் இல்லை என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் தேங்காய்க்கான தட்டுப்பாடு ஏற்படவில்லை என வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன குறிப்பிட்டார். தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்து தேங்காய் விலையை அதிகரிக்க சில தரப்பினர் முயற்சிப்பதாகவும் வர்த்தக அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். தேங்காய்க்கு விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை மாற்றுவதற்கான தேவை தற்போது இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அதிக விலையில் தேங்காய் விற்பனையில் ஈடுபடுவோர் தொடர்பில் ஆராய்வதற்கான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. அவ்வாறான விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச சில்லரை விலைக்கு அதிகமாக தேங்காய்களை விற்பனை செய்த 56 பேருக்கு எதிராக நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, புத்தளம், கேகாலை, இரத்தினபுரி, மாத்தறை, மாத்தளை, பதுளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் நேற்று விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார். அநுராதபுரம் மற்றும் பொலன்நறுவை மாவட்டங்களில் அதிக விலையில் தேங்காய் விற்பனையில் ஈடுபடுவோர் தொடர்பில் இன்று (29) சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.