மேல் மாகாண சுற்றிவளைப்பில் 488 பேர் கைது

மேல் மாகாண சுற்றிவளைப்பில் 488 பேர் கைது

by Staff Writer 28-09-2020 | 4:34 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 488 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனையின் பேரில் நேற்று (27) காலை 6 மணி முதல் இன்று (28) அதிகாலை 5 மணி வரை இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ஹெரோயின், கஞ்சா, சட்டவிரோத மதுபானம், கோடா மற்றும் ஐஸ் போதைப்பொருள் என்பனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்போது மேற்கொள்ளப்பட்ட மேலதிக 16 சுற்றிவளைப்புகளில் சந்தேக நபர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1,500 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாவின்றி நாட்டில் தங்கியிருந்த 47 வௌிநாட்டவர்களும் இதில் அடங்குகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.