அரிசிக்கான நிர்ணய விலை அறிவிப்பு

அரிசிக்கான நிர்ணய விலை அறிவிப்பு

by Staff Writer 27-09-2020 | 9:31 AM
Colombo (News 1st) அரிசி இறக்குமதிக்கான எவ்வித திட்டங்களும் இல்லை என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அரிசி ஆலை உரிமையாளர்கள், சந்தைகளில் அரிசிக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் பட்சத்தில் அரிசியை இறக்குமதி செய்வதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். வருடத்தின் இறுதி காலப்பகுதியில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படும் சந்தர்ப்பங்கள் உள்ளதா என்பது தொடர்பில் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் அத்தகைய சந்தர்ப்பங்களை எதிர்நோக்கக்கூடிய வகையிலான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். அடுத்த வருடத்தின் மார்ச் மாதம் வரை நாட்டிற்கு தேவையான அரிசி காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரிசிக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த நாட்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 44 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நுகர்வோர் அதிகார சபையினால் நாட்டரிசி ஒரு கிலோகிராம் 96 ரூபாவுக்கும் சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 98 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமென நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.