by Bella Dalima 26-09-2020 | 4:25 PM
Colombo (News 1st) கொரோனா தடுப்பூசி தயாராவதற்குள் உலக அளவில் 20 இலட்சம் பேர் இறக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலொன்றை வௌியிட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 9,94,016 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று (25) சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால திட்டத்தின் நிர்வாக இயக்குனர் மைக் ரியான், கொரோனா தடுப்பூசியைப் பெறுவதற்கான சாதகமான சூழலைப் பார்க்கும்போது தடுப்பூசி தயாராவதற்கு முன்பே 20 இலட்சம் மக்கள் கொரோனாவால் பலியாகக்கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், உலகத் தலைவர்கள் உயிர் காக்கும் நடவடிக்கையில் சிறப்பாக செயற்படுவதின் மூலம் மட்டுமே இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியும் என குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. ரஷ்யாவில் கடந்த மாதம் கொரோனாவிற்கு தடுப்பூசி தயாரித்துவிட்டதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்திருந்தார். அமெரிக்காவும் தடுப்பூசி தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறது.