by Staff Writer 24-09-2020 | 12:39 PM
Colombo (News 1st) எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் போது மரங்களை வெட்டி அகற்றாது அவற்றை வேறு இடங்களில் மீள நடுவதற்கான திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியக அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது சுற்றாடல் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் எதிர்காலத்தில் ஒரு இலட்சம் கிலோமீற்றர் நீளமுடைய கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யவும் 5,000 குளங்களை புனரமைக்கவும் உத்தேசித்துள்ளது.
இந்த திட்டங்களின் போது ஒரு கிலோமீற்றருக்கு இரண்டு மரங்களை வெட்டுவதற்கு நேரிட்டால் அன்னளவாக சுமார் 2 இலட்சம் மரங்களையேனும் வெட்டுவதற்கு நேரிடலாம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் மரங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அகற்றி வேறு இடங்களில் மீள் நடுகை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மரங்களை பாதுகாப்பாக அகற்றக்கூடிய 2 இயந்திரங்களை விரைவில் இறக்குமதி செய்யவுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.