IPL: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி

IPL: சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி

by Staff Writer 23-09-2020 | 9:21 AM
Colombo (News 1st) IPL கிரிக்கெட் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 16 ஓட்டங்களால் வெற்றியீடடியது. சஞ்சு சம்சொன், ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஜொப்ரா ஆர்ச்சர் ஆகியோரின் அதிரடியின் மூலம் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 216 ஓட்டங்களை குவித்தமை குறிப்பிடத்தக்கது. சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக சஞ்சு சம்சொன் 9 சிக்சர்களுடன் 32 பந்துகளில் 74 ஓட்டங்களை விளாசினார். இருபதுக்கு 20 அரங்கில் முதற்தடவையாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 69 ஓட்டங்களை விளாசினார். வேகப்பந்து வீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சர் லுங்கி இங்கிடியின் கடைசி ஓவரில் 27 ஓட்டங்களை விளாசினார். அதில் 4 சிக்சர்கள் அடுத்தடுத்து விளாசப்பட்டன. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ஓட்டங்களை குவித்தது. IPL அரங்கில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி போட்டியொன்றில் பெறும் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். ஷாம் கரான் 03 விக்கெட்களை வீழ்த்தினார். பதிலளித்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பாக ஷேன் வொட்சன் 04 சிக்சர்களுடன் 33 ஓட்டங்களையும் பெற்றார். பெப் டு பிளசிஸ் 7 சிக்சர்களுடன் 37 பந்துகளில் 72 ஓட்டங்களை விளாசி வெற்றிக்காக போராடினர். அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி கடைசி ஓவரின் 3 பந்துகளில் சிக்சர் விளாசி 29 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். சென்னை சுப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ஓட்டங்களையே பெற முடிந்தது. போட்டியில் இரு அணிகளாலும் 33 சிக்சர்கள் விளாசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.