by Staff Writer 23-09-2020 | 1:35 PM
Colombo (News 1st) முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராக விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று (23) கொழும்பு மேலதிக நீதவான் R.U. ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல் கிடைத்திருந்த போதிலும் கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் கடமையை நிறைவேற்ற தவறிய குற்றச்சாட்டில் அவர்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெறுவதற்காக விசாரணைக் கோவை கையளிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் மன்றுக்கு அறிவித்தது.
அத்துடன், சட்ட மா அதிபரின் ஆலோசனையை அறிக்கையிடுவதற்காக திகதியொன்றை அறிவிக்குமாறும் மன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிணங்க, அடுத்த வருடம் மார்ச் மாதம் 17 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், அன்று மன்றில் ஆஜராகுமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.