இன்று முதல் வீதி ஒழுங்கு விதியில் மாற்றம்

பஸ் முந்துரிமை வீதியில் மோட்டார்சைக்கிள், முச்சக்கரவண்டிகளுக்கு அனுமதி இல்லை

by Staff Writer 23-09-2020 | 7:49 AM
Colombo (News 1st) இன்று (23) முதல் பஸ் முந்துரிமை வீதி, அலுவலக போக்குவரத்து மற்றும் பாடசாலை வேன்களுக்காக மட்டுப்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஸ் முந்துரிமை வீதியில் பயணிகள் போக்குவரத்து பஸ்கள், அலுவலக பஸ்கள் மற்றும் வேன்கள் மற்றும் பாடசாலை வேன்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். அதற்கிணங்க, வீதி ஒழுங்கு விதி அமுல்படுத்தப்பட்டுள்ள வீதிகளில் ஏனைய வாகனங்கள் பயணிக்க அனுமதியளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வீதி ஒழுங்கு விதி நடைமுறையில் உள்ள கொழும்பின் 4 வீதிகளில் ஏனைய வாகனங்களும் பயணிக்க முடியுமா என்பது தொடர்பில் வினவியபோது, இரண்டாக பிரிக்கப்பட்டுள்ள வீதிகளில் ஏனைய வாகனங்கள் இரண்டாவது ஒழுங்கு வீதியில் பணிக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார். இந்த வீதிகளில் கார்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் இடது பக்கத்தில் பயணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். இதேவேளை, மூன்றாக பிரிக்கப்பட்டுள்ள வீதிகளில் மூன்றாவது வீதிப்பகுதியில் கார்கள் பயணிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஏனைய செய்திகள்