by Staff Writer 20-09-2020 | 9:15 AM
Colombo (News 1st) UPDATE: கண்டி - பூவெலிகட (BOOVELIGADA) பகுதியில் 5 மாடி கட்டடமொன்று இடிந்து வீழந்ததில் ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தைதையை காப்பாற்றுவதற்காக தமது வைத்திய குழு கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் சமன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இடிபாடுகளுக்குள் சிக்கிய சிசுவின் பெற்றோரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட உதவி பணிப்பாளர் இந்திக ரணவீர குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினரும் பொலிஸாரும் இடர்முகாமைத்துவ அதிகாரிகளும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
கட்டட இடிபாடுகள் அகற்றப்பட்டு மீட்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கண்டி - பூவெலிகட பகுதியில் 5 மாடிக்கட்டிடமொன்று இன்று (20) அதிகாலை இடிந்து வீழ்ந்தது.
அப்பகுதியிலுள்ள வீடொன்றின் மீதே, குறித்த கட்டடம் இடிந்து வீழ்ந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட உதவி பணிப்பாளர் இந்திக ரணவீர குறிப்பிட்டார்.
இன்று அதிகாலை 3 .30 மணியளவில் இடிந்து வீழ்ந்த கட்டடத்தில் ஒருவித சத்தம் கேட்டுள்ளதுடன், சில அறிகுறிகளும் தென்பட்டுள்ளதால், கட்டடத்தில் தங்கியிருந்தவர்கள் அங்கிருந்து வௌியேறியுள்ளனர்.
எனினும் அருகிலிருந்த குடியிருப்பாளர்களுக்கு அது குறித்து அறிவிக்கப்படவில்லை என நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டார்.
குறித்த கட்டடம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தாழிறங்கியுள்ளதுடன், அருகிலிருந்த வீட்டின் மீது இடிந்து வீழ்ந்துள்ளது.
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சிசு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி சிசு உயிரிழந்துள்ளது.