நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை

by Staff Writer 20-09-2020 | 7:16 AM
Colombo (News 1st) சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. காலி, மாத்தறை மாவட்டங்களில் 50 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் நிலவும் காற்றுடன் கூடிய வானிலை எதிர்வரும் நாட்களிலும் தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வட மத்திய, வட மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு முதல் திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழமற்ற கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனால் கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கற்பிட்டி முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் கடலலை 2.5 முதல் 3 மீற்றர் வரை உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடற்சார் ஊழியர்களும் மீனவர்களும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகும் சாத்தியமுள்ளதால் எதிர்வரும் நாட்களில் வங்காள விரிகுடாவின் கிழக்கு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை மற்றும் கடல் கொந்தளிப்பு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எதிர்வரும் 22 ஆம் திகதி வரை கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.