உணவு வீண் விரயமும் போசணைக் குறைபாடும்

அதிகரித்து வரும் போசணைக் குறைபாடும் உணவு வீண் விரயமும்

by Bella Dalima 19-09-2020 | 7:18 PM
Colombo (News 1st) உலகில் சுமார் 690 மில்லியன் பேர் ஒவ்வொரு இரவிலும் உணவின்றி உறங்கச் செல்வதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அவர்களில் மூவரில் ஒருவர் போசணைக் குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அவ்வாறான பின்புலத்தில், இலங்கையில் வருடாந்தம் 270,000 தொன் பழங்களும் மரக்கறிகளும் அழிவடைவதுடன், இதனால் பொருளாதாரத்தில் 20 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுகிறது. 2050 ஆம் ஆண்டளவில் உலக சனத்தொகை 9.1 பில்லியனாக அதிகரிக்கலாம் என்பதுடன், அது தற்போதைய சனத்தொகையிலிருந்து 34 வீத உயர்வாகக் கணிக்கப்பட்டுள்ளது. சனத்தொகை அதிகரித்து செல்வதற்கு இணையாக உணவு உற்பத்தி மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பாகக் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் உணவு வேலைத் திட்டப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அறுவடை தொழில்நுட்ப நிறுவனங்களின் பெறுபேறுகளின் பிரகாரம் இலங்கையில் மரக்கறி மற்றும் பழங்களின் வருமானத்தில் 30 முதல் 40 வீத இழப்பு ஏற்படுகிறது. நமது நாட்டில் 5 வயதிற்குக் குறைந்த பிள்ளைகளில் போசணைக் குறைபாடு மட்டம் 21 வீதமாகவுள்ளது. சிரேஷ்ட பிரஜைகளில் 73 வீதமானோருக்கு பழங்கள் மற்றும் மரக்கறிகளைப் பெற முடியாதுள்ளது. அவ்வாறான நிலைமையில், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மரக்கறி, பழங்களை அப்புறப்படுத்தி அவற்றை விலங்குகளின் உணவாக விற்கும் போது அவை வீண் விரயமாகும் வாய்ப்புகள் அதிகமுள்ளன. நாட்டில் பயிர் செய்கை திட்டமொன்று இல்லாமை, விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்காமை, நுகர்வோர் அதிக பணம் கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை மற்றும் உற்பத்திகளின் தரம் குறைந்து செல்வதால் அறுவடையில் தொய்வு ஏற்படுவதாக இது தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் விடுத்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக நமது நாட்டில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண்மை உட்பட பல செய்கைகள் வெறுமனே அழிவடைவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு வீண் விரயமாவதைத் தடுப்பதற்கும், போக்குவரத்து மற்றும் பொதி செய்யும் செயற்பாடுகளின் போது ஏற்படும் இழப்பை நிர்வகிப்பதற்கும், முறையான பொதி செய்தல் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும், நாட்டில் ஏற்றுமதி வசதிகளை ஊக்குவிப்பதற்கும், உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்வதற்கும் அரசாங்கத்தின் தலையீடு அவசியமாகும். நாட்டில் அறுவடைக்குப் பின்னரான பாதிப்பைக் குறைத்துக்கொள்வதற்கு மாற்றுத் தீர்வாக கணக்காய்வாளர் திணைக்களம் இலங்கையில் மரக்கறி மற்றும் பழங்கள் ஏற்றுமதி சந்தையை விஸ்தரிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு இலங்கை சுமார் 11 நாடுகளுக்கு 24,845 மெட்ரிக் தொன் மரக்கறிகளையும், ,76,997 மெட்ரிக் தொன் பழங்களையும் மாத்திரமே ஏற்றுமதி செய்துள்ளது. இந்தப் பெறுமானமானது நாட்டின் மொத்த உற்பத்தியில் அண்ணளவாக 2.4 நான்கு வீதமாகவுள்ளது. ஏற்றுமதி சந்தையை விஸ்தரிப்பதன் ஊடாக விலையில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிம் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.