20ஆவது திருத்தம் ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கம்

20 ஆவது திருத்தம் ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது

by Staff Writer 18-09-2020 | 4:04 PM
Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் எதிர்வரும் 22 ஆம் திகதி ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது. முதலாவது வாசிப்பிற்காக இந்த சட்டமூலம் ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்தார். 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைபு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தின் போது, 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருவதற்காக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி , நிமல் சிறிபால டி சில்வா, தினேஸ் குணவர்த்தன, உதய கம்மன்பில மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் அந்தக் குழுவில் அங்கம் வகித்தனர். செப்டம்பர் 02 ஆம் திகதி, 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு என்ற பெயரில் ஆவணமொன்று சமர்ப்பிக்கப்பட்டதுடன் அது வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த அரசியலமைப்பு திருத்த வரைபில் சில விடயங்கள் தொடர்பில் அமைச்சரவை உறுப்பினர்களும் ஆளும் கட்சியின் சிலரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.