இரத்தினபுரி தொழிலாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

by Staff Writer 17-09-2020 | 7:45 PM
Colombo (News 1st) இரத்தினபுரி மாவட்டத்தின் தொழிலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அமைதியின்மை ஏற்பட்டது. மாவட்ட தொழிலாளர் அலுவலகம் அவிசாவளைக்கு இடமாற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தொழிலாளர்கள் உள்ளிட்ட சிலர் இரத்தினபுரி மாவட்ட தொழிலாளர் அலுவலகத்தின் முன்பாக இரண்டாவது நாளாக இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். நீதிமன்ற உத்தரவு தொடர்பாக பொலிஸார் அறிவித்ததையும் கவனத்திற்கொள்ளாமல் இவர்கள் இரத்தினபுரி - கொழும்பு பிரதான வீதியை மறித்து எதிர்ப்பில் ஈடுபட்டனர். அதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் இரத்தினபுரி மாவட்ட தொழிலாளர் அலுவலகத்திற்குள் பிரவேசித்தனர். பின்னர் இரத்தினபுரி உதவி பொலிஸ் அத்தியட்சகர் அவ்விடத்திற்கு வருகை தந்தார். இதன்போது அவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தலையீடு செய்வதாகக் கூறினார். சிறிது நேரம் எதிர்ப்பில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.