ஓலைக் குடிசையில் ஆரம்பக் கல்வி...

ஓலைக் குடிசையில் ஆரம்பக் கல்வி: பூதன்வயல் சிறுவர்களின் நிலை

by Chandrasekaram Chandravadani 16-09-2020 | 8:51 AM
Colombo (News 1st) 'இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள்' என்பது சான்றோர் கூற்று. ஆனால், தமது எதிர்காலத்தையே தொலைத்துவிடுவோமோ என்ற அச்சத்தில் தவிக்கும் இளம் பிஞ்சுகளை முல்லைத்தீவு மாவட்டத்தின் பூதன்வயல் பகுதியில் காணக் கிடைத்தது. தரம் 5 வரையான வகுப்புகளைக் கொண்ட பூதன்வயல் கிராமத்தில், பாடசாலைக்கென பிரத்தியேகமான நிரந்தர இடமில்லாது மாணவர்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாவதை மக்கள் சக்தி குழுவினரால் கண்கூடாக அவதானிக்க முடிந்தது. பாடசாலைக்கு என ஒதுக்கப்பட்ட அரச காணியை பண பலம் படைத்த ஒரு தரப்பினர் தமக்கு சொந்தமானது என உரிமை கோரி வருவதாக பாடசாலையின் அதிபர், ஆசிரியரால் கூறப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டு, விசாரணை முன்னெடுக்கப்பட்ட போதிலும் தமக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை அவர்கள் ஆதங்கம் வௌியிட்டனர். பெற்றோரும் அதிபர், ஆசிரியர்களும் முன்னெடுத்த முயற்சியின் பலனாக பூதன்வயல் பொதுநோக்கு மண்டபத்திலும் திறந்தவௌியில் அமைக்கப்பட்ட ஓலைக் குடிசையிலும் தான் இங்குள்ள சிறுவர்கள் ஆரம்பக் கல்வியைத் தொடர்கிறார்கள். தினக்கூலி வேலைகளுக்கு செல்லும் பெற்றோரால் அதிக பணம் செலுத்தி பிள்ளைகளை தனியார் வகுப்புகளுக்கு அனுப்ப முடியவில்லை. ஆகவே, தமது சிறுவர்கள் கல்வியைத் தொடர்வதற்காக குறித்த காணியை மீள பெற்றுத்தர வேண்டும் என்பதே அவர்களின் கல்வியில் அக்கறை கொண்டுள்ள அனைவரதும் கோரிக்கையாகவுள்ளது.