Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் இருந்த குறைபாடுகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பரிசீலிப்பதற்காக பிரதமர் நியமித்த குழுவின் உறுப்பினரான அமைச்சர் உதய கம்மன்பில கண்டியில் இன்று தெரிவித்தார்.
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வறக்காகொட ஞானரத்தன தேரரை சந்தித்து அமைச்சர் இது தொடர்பில் தௌிவுபடுத்தினார்.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் சில குறைப்பாடுகள் இருந்தன. அதற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டபோது, தான்தோன்றித்தனமான தலைவராக இருந்தால் எனக்கு தேவை என்றால் நான் இதனை செய்வேன் என கூறியிருப்பார். ஆனால், அவர் உடனடியாக குழுவொன்றை நியமித்து குறைகளைக் கண்டறியுமாறு பொறுப்பை ஒப்படைத்தார். அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் வீட்டில் கூடிய நாம் நேற்றிரவு இந்த குறைபாடுகளை திருத்தினோம். இத்தகைய ஆவணங்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இலங்கை வரலாற்றில் ஒருபோதும் அதன் குறைபாடுகள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்படவில்லை. மனிதர்களுக்கு தவறு ஏற்படுகின்றமை இயல்பானது. அந்த தவறை ஏற்றுக்கொள்வதே முக்கியமாகும்
என உதய கம்மன்பில கூறினார்.