Colombo (News 1st) நூற்றாண்டு பழமைவாய்ந்த மிகப்பெரிய மரங்கள் அனுராதபுரம் - இஹல தலாவ குளத்தில் இருந்து வேருடன் பிடுங்கப்பட்டுள்ளன.
குளத்தை அபிவிருத்தி செய்யும் போர்வையில் ஒப்பந்தக்காரர்கள் இந்த மோசடியை செய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
விவசாயிகள் பல வருடங்களாக முன்வைத்த கோரிக்கையின் பலனாக அனுராதபுரம் - தலாவ நகர மத்தியில் அமைந்துள்ள இஹல குளத்தின் நிர்மாணப்பணிகள் 10 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டன.
செயற்றிட்டம் தொடர்பான தவல்கள் அடங்கிய பதாதையில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம், காலநிலை மாற்றங்களைக் குறைக்கும் செயற்றிட்டத்தின் கீழ் இதன் புனர்நிர்மாணப் பணிகளுக்காக 3 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது உலக வங்கியின் நிதி உதவியுடனான செயற்றிட்டமாகும்.
அதன் பிரகாரம், இஹல தலாவ குளத்தில் சேற்றை அப்புறப்படுத்தல், குளக்கட்டு மற்றும் நீர் வடிந்தோடும் பகுதியைத் தயாரிக்கும் ஒப்பந்தம் ஜயரத்ன கன்ட்ராக்ட் எனப்படும் கல்னேவ பகுதியைச் சேர்ந்த ஒப்பந்த நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சேற்றை அப்புறப்படுத்தி குளக்கட்டை தயாரிக்கும் பணி எவ்வாறிருந்த போதிலும் குளத்தின் ஒவ்வொரு இடத்திலும் தோண்டப்பட்டு பெருமளவு மண் அகழப்பட்டுள்ள காட்சிகளை காண முடிகின்றது.
குளத்திற்கு பல வருடங்களாக பாதுகாப்பு வேலியாக இருந்த பாரிய மரங்கள் பலவும் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
மரப்பலகைக்கு தேவையான மரக்குற்றிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு எஞ்சிய வேர் உள்ளிட்ட பகுதிகள் குளத்தில் போடப்பட்டிருந்தன.
குளத்தின் நீர் தேங்கும் பகுதி சரியாக சீர் செய்யப்படவில்லை. அதனால் தேங்கும் நீர் வடிந்தோடுகின்றது. அடுத்த மாதம் பலத்த மழை பெய்யும். அப்போது இந்த பகுதிகள் உடைப்பெடுக்கும். ஐந்து சதத்திற்கு பிரயோசனமாக எதனையும் செய்ததாக இல்லை
என பிரதேசவாசி குறிப்பிட்டார்.
மகாவலி H வலயத்தில் அமைந்துள்ள இஹல தலாவ குளத்தின் அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அழிவு தொடர்பாக பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.