நிபந்தனைகளுக்கு இணங்கினால் விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற தயாரென டெனிஸ்வரன் தெரிவிப்பு

by Staff Writer 15-09-2020 | 6:10 PM
Colombo (News 1st) நீதிமன்ற உத்தரவை செயற்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதாக தெரிவித்து வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவருக்கு எதிராக வட மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் தாக்கல் செய்திருந்த வழக்கின் சாட்சி விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான மஹிந்த சமயவர்தன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் மீதான குற்றச்சாட்டு தமிழ் மொழியில் வாசிக்கப்பட்டது. எனினும், இந்த குற்றச்சாட்டுகளில் தாம் நிரபராதி என அனந்தி சசிதரன் மன்றுக்கு அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கின் முறைப்பாட்டுத் தரப்பு சாட்சியாளர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வட மாகாண முன்னாள் பிரதம செயலாளர் அந்தோனிபிள்ளை பத்திநாதன், வட மாகாண ஆளுநர் அலுவலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் சிவலிங்கம் சத்தியசீலன் ஆகியோர் சாட்சி வழங்கினர். தங்களின் இரண்டு நிபந்தனைகளுக்கு பிரதிவாதிகள் இணங்கினால் வழக்கை வாபஸ் பெற தயாராகவுள்ளதாக மனுதாரரான ப.டெனிஸ்வரன் சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தனது சேவை பெறுநரை முறையற்ற வகையில் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியமை தொடர்பில் சி.வி. விக்னேஸ்வரன் மன்னிப்பு கோர வேண்டும் எனவும், டெனிஸ்வரனை மீண்டும் அமைச்சுப் பதவியில் அமர்த்துமாறும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் எனவும் மனுதாரர்கள் நிபந்தனை முன்வைத்துள்ளனர். இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் பிரதிவாதிகள் இணங்கினால் தங்களின் மனுவை வாபஸ் பெற தயாராகவுள்ளதாகவும் மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். எனினும், எவ்வித நிபந்தனைகளுக்கும் இணங்க தமது தரப்பு தயார் இல்லை எனவும் வழக்கை எதிர்கொள்ள தயாராகவுள்ளதாகவும் சி.வி. விக்னேஸ்வரன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கே. கனகீஸ்வரன் மன்றில் தெரிவித்துள்ளார். அதற்கமைய, இந்த வழக்கின் சாட்சி விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்க நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது. இந்த வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் நாளை பிற்பகல் இடம்பெறவுள்ளன.