நாலக டி சில்வாவின் அடிப்படை உரிமை மனு தள்ளுபடி

நாலக டி சில்வா தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு தள்ளுபடி

by Staff Writer 15-09-2020 | 6:49 PM
Colombo (News 1st) பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பிரமுகர்கள் கொலை முயற்சிக்கான சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தி, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்படுவது சட்டவிரோதமானது என உத்தரவிடுமாறு கோரி பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மனுத்தாக்கல் செய்திருந்தார். உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் யசந்த கோத்தாகொட ஆகியோர் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள தனது சேவை பெறுநருக்கு, பணி நீக்கம் செய்யப்பட்ட காலம் தொடக்கம் அரை மாதத்திற்கான சம்பளத்தை வழங்க இணக்கம் தெரிவிக்கும் பட்சத்திலும், இந்த விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீக்கிக்கொள்ள இணங்கினாலும், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தங்களின் மனுவை வாபஸ் பெற தயார் என மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ளார். மனுதாரருக்கான அரை மாத சம்பளத்தை வழங்குவது தொடர்பில் தற்போதும் ஆராயப்படுவதாகவும் மனுதாரரின் முதலாவது கோரிக்கையான விசாரணையை நீக்குவது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மன்றில் தெரிவித்தார். இருதரப்பு விடயங்களையும் பரிசீலனை செய்த நீதியரசர்கள் குழாம், மனுவை வாபஸ் பெற மனுதாரர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கியதுடன், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.