கண்டி நில அதிர்வு விசாரணைக்கு மூவரடங்கிய குழு

கண்டி நில அதிர்வு தொடர்பில் விசாரிக்க மூவரடங்கிய குழு

by Staff Writer 15-09-2020 | 9:45 AM
Colombo (News 1st) கண்டியின் பல பிரதேசங்களில் உணரப்பட்ட அதிர்வு தொடர்பிலான விசாரணைகளுக்காக மூவர் கொண்ட குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கலாநிதிகள் மற்றும் பேராசிரியர்களை கொண்ட குழுவொன்றே நியமிக்கப்படவுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார். இதற்காக பேராதனை மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகங்களின் கலாநிதிகள் மற்றும் பேராசிரியர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார். கண்டியில் பதிவான அதிர்வுகளுக்கான காரணம் மற்றும் அதற்கு வழங்கப்படக்கூடிய நிரந்தர தீர்வு தொடர்பில் குறித்த குழுவினூடாக ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல கூறியுள்ளார். கண்டியின் குண்டசாலை, பன்வில மற்றும் வத்தேகம உள்ளிட்ட சில பகுதிகளில் அண்மையில் மீண்டும் அதிர்வு பதிவானது. தமது 04 மத்திய நிலையங்களில் அதிர்வுகள் பதிவானதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.