கோரிக்கைக்கு அரசு பதில் கூற வேண்டுமென வலியுறுத்தல்

தமது கோரிக்கைகளுக்கு அரசும் தொழிலாளர் காங்கிரஸுமே பதில் கூற வேண்டுமென மனோ கணேசன் வலியுறுத்தல் 

by Staff Writer 14-09-2020 | 10:18 PM
Colombo (News 1st) மலையக தமிழ் மக்கள் தொடர்பில் தேசிய அரங்கில் தாம் முன்வைத்துள்ள இரு முக்கிய கோரிக்கைகளுக்கு அரசாங்கமும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுமே பதில் கூற வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்பு குழுவில் ஏனைய சகோதர இன பிரதிநிதிகள் இடம்பெற்றிருப்பதை போன்று, மலையக தமிழ் பிரதிநிதி ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும் என தாம் கோரிக்கை விடுத்திருந்ததாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெருந்தோட்டங்களை சிறுதோட்ட முறைமைக்குள் கொண்டுவந்து காணிகள் பிரித்து வழங்கப்படும் உத்தேச திட்டத்தில், தோட்டத் தொழிலாளர்களையும் பங்காளிகளாக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இரு விடயங்கள் தொடர்பிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதுவுமே தெரியாதது போல் கள்ள மெளனம் சாதிப்பதாக மனோ கணேசன் குற்றஞ்சுமத்தியுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனவரி முதல் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட 1,000 ரூபா நாள் சம்பளம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். விரைவில் தேர்தல் முறையில் மாற்றம் ஏற்பட்டு, சிறுபான்மை பிரதிநிதித்துவம் ஒழியப்போகிறது என எச்சரித்துள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், அப்போதும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசுக்குள்ளே பேசாமடந்தையாக இருக்கப்போகின்றதா என வினவியுள்ளார்.

ஏனைய செய்திகள்