கண்டியின் சில பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு

கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு 

by Staff Writer 13-09-2020 | 3:12 PM
Colombo (News 1st) கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது. குண்டசாலை, பன்வில, வத்தேகம உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் 4 மத்திய நிலையங்களிலும் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் உதய டி சில்வா குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ஏற்பட்ட நில அதிர்வுகளும் குறித்த பகுதிகளில் உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், இது குறித்து ஆராய்வதற்கு நாளைய தினம் பேராதனை மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகங்களின் விசேட நிபுணர்கள் கொண்ட குழுவை நியமிக்கவுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.