அரச காணி தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியீடு

அரச காணி தொடர்பிலான ஆவணங்களை பெற்றுக் கொடுப்பதற்கான விசேட வர்த்தமானி வெளியீடு

by Staff Writer 13-09-2020 | 9:36 PM
Colombo (News 1st) அரசாங்க காணிகளை பயன்படுத்துவதற்கு சட்டபூர்வமான ஆவணங்களை வழங்குவது தொடர்பாக காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் விசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. எவ்வித ஆவணங்களும் இன்றி அரசாங்க காணிகளில் தங்கியுள்ள அல்லது அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சட்டபூர்வமான ஆவணங்களை வழங்கும் திட்டத்தை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. சுபீட்சத்திற்கான இலக்கு அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப முதலீட்டு வாய்ப்புகளை விஸ்தரித்தல், உள்நாட்டு பால் உற்பத்தி மேம்பாடு, மற்றும் உள்நாட்டு உணவு உற்பத்திக்காக அரசாங்க காணிகளை உகந்ததாக முகாமைத்துவம் செய்வது இதன் முதன்மை நோக்கமாகும். அந்த நோக்கத்தின் முதலாவது நடவடிக்கையாக நாட்டின் பிரஜைகளுக்கான காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்காக முறையான ஆவணமொன்றை வழங்குவது அரசாங்கத்தின் திட்டம் எனவும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதுடன், இந்த விண்ணப்பங்களை பிரதேச செயலங்கள் அல்லது கிராம உத்தியோகத்தர்களிடம் கையளிக்க வேண்டும். வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏற்ப, விசேட அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களை உள்ளக்கும் வகையில் இந்த சட்டபூர்வமான ஆவணம் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.