தாருசலாமில் உயர்பீட கூட்டம்: அரசாங்கத்துடன் இணையும் திட்டம் இதுவரை இல்லை என தெரிவிப்பு

by Bella Dalima 12-09-2020 | 7:10 PM
Colombo (News 1st) ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருசலாமில் உயர்பீட கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நிசாம் காரியப்பர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உயர்பீட உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதன்போது, முஸ்லிம் சமூகத்திற்கு வரும் பிரச்சினைகளை இனங்கண்டு, அரசாங்கத்துடன் சுமூகமாகப் பேசி தீர்வு காண்பது குறித்து கலந்துரையாடியதாக பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்தார். அரசாங்கத்துடன் இணையும் திட்டம் உள்ளதா என வினவப்பட்ட போது, அவ்வாறான நோக்கம் இதுவரை இல்லை என பைசல் காசிம் பதிலளித்தார். அதேபோல், 20 ஆவது சட்டத் திருத்தத்திற்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் தாம் இதுவரை தீர்மானிக்கவில்லை என குறிப்பிட்டார்.