குற்றவாளிகள் யாராயினும் சட்டம் ஒரே மாதிரியாக நடைமுறைப்படுத்தப்படும்: பாதுகாப்பு செயலாளர்

by Bella Dalima 12-09-2020 | 7:57 PM
Colombo (News 1st) குற்றங்கள், தவறுகளை இழைக்கும் சகலருக்கும் எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன குறிப்பிட்டார். சிறைச்சாலைகளில் இருக்கும் நெருக்கடியை குறைப்பதற்கு பழைய போகம்பறை சிறைச்சாலை வளாகத்தை பயன்படுத்த முடியுமா என ஆராய்வதற்காக பாதுகாப்பு செயலாளர் இன்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போதே அவர் இவ்விடயத்தைக் கூறினார். பூஸா சிறைச்சாலையில் கைதிகள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்பில் இதன்போது அவரிடம் வினவப்பட்டது. போராட்டத்தை முன்னெடுத்துள்ள சிறைக் கைதிகளே நாட்டிலுள்ள மிகப்பெரிய குற்றவாளிகள் எனவும் நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளை மாத்திரமே தம்மால் நிறைவேற்றி வைக்க முடியும் எனவும் கமல் குணரத்ன தெரிவித்தார்.
அது உயர் பாதுகாப்பு மிக்க சிறைச்சாலை. சிறைச்சாலை ஆணையாளர் உட்பட அங்கு செல்லும் எந்த ஒருவரையும் சோதனையிட்டே உள்ளே அனுமதிப்பர். உணவு தவிர்ப்பு குறித்து கூறுவதற்கு ஒரு விடயமே உள்ளது. நமது நாட்டில் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த சகலரும் இரண்டு மூன்று நாட்கள் செல்லும் போது பசி உச்சகட்டத்தை அடையும் போது ஏதேனுமொரு காரணத்திற்காக எவரேனும் கொடுக்கும் பழச்சாறை அருந்தி அல்லது இளநீரை அருந்திவிட்டு எழுந்துவிடுவார்கள்
என கமல் குணரத்ன கூறினார். மேலும், வௌியில் உள்ள குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு முன்னதாக, பொலிஸ், இராணுவம், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் என உள்ளிருந்து குற்றமிழைப்பவர்களை சுத்தப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.