மஹிந்தானந்தவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

39 இலட்சம் ரூபா முறைகேடு: மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

by Staff Writer 11-09-2020 | 3:30 PM
Colombo (News 1st) இலங்கை சுதந்திர ஊழியர் காங்கிரஸ் எனப்படும் தொழிற்சங்கத்திற்கு சொந்தமான 39 இலட்சம் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளின் கீழ் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை எதிர்வரும் 14ஆம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெதிகே ஒத்திவைத்துள்ளார். வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சாட்சியாளர்களாக அழைக்கப்பட்டிருந்த இலங்கை சுதந்திர ஊழியர் சங்க தொழிற்சங்கத்தின் செயலாளர் மாரிமுத்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் பிரதிவாதியான மஹிந்தானந்த அளுத்கமகேவின் சாரதியாக செயற்பட்ட வசந்த ராஜபக்ஸ உள்ளிட்டோர் சாட்சியமளித்தனர். வழக்கின் 6, 15, 19 மற்றும் 21 ஆவது சாட்சியாளர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.