ரஷ்ய பல்கலைக்கழகங்கள் தொடர்பான மருத்துவ சபையின் தீர்மானம் இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்துமா?

by Staff Writer 11-09-2020 | 8:32 PM
Colombo (News 1st) ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இருந்து தமது 3 பல்கலைக்கழகங்களை முன்னறிவிப்பின்றி நீக்க இலங்கை மருத்துவ சபை எடுத்த தீர்மானம் தொடர்பாக அதீத கவனம் செலுத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த தீர்மானம் இலங்கையர்களுக்கு ரஷ்யா வழங்கும் புலமைப்பரிசிலை இடைநிறுத்துவதற்கு வழியேற்படுத்தாது என இலங்கையிலுள்ள ரஷ்ய தூதரகத்தின் கலாசார பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற Patrice Lumumba University எனப்படும் The People's Friendship University of Russia என தற்போது அழைக்கப்படும் பல்கலைக்கழகம், Pirogov Russian National Research University மற்றும் Tver State Medical University ஆகியன அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டியலில் இருந்து நீக்கப்படன. இராஜதந்திர தொடர்புகளைக் கொண்ட 60 வருடகால வரலாற்றில் ரஷ்யா பலவிதமான புலமைப்பரிசில்களை இலங்கைக்கு வழங்கியுள்ளதுடன், அதனூடாக மருத்துவ நிபுணர்கள் பலர் உருவானதாக ரஷ்ய தூதுவராலயத்தின் கலாசார பிரிவு தெரிவித்துள்ளது. இந்த தீர்மானத்தினால் ரஷ்ய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் இதுபோன்ற சிறப்புரிமைகள் இழக்கப்பட்டு, நாட்டின் இளைஞர் சமுதாயத்திற்கான வாய்ப்புகளைத் தவறவிட இடமளிக்கமாட்டார்கள் என நம்புவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் asbestos மீது தடை விதிப்பதற்கு இலங்கை தீர்மானித்த போது இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகள் கடும் சிக்கலுக்குள்ளாகின. அவை நேரடியாக அறிவிக்கப்படாவிட்டாலும் அந்த தருணத்தில் தேயிலையில் சிறு பூச்சி இனமொன்று காணப்பட்டதாகத் தெரிவித்து இலங்கை தேயிலையை கொள்வனவு செய்வதனை ரஷ்யா நிறுத்தியது. இலங்கையிடமிருந்து தேயிலையைக் கொள்வனவு செய்யும் பிரதான நடாக ரஷ்யா காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.