by Staff Writer 11-09-2020 | 4:14 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்தின் இருவேறு பகுதிகளிலுள்ள இரண்டு வீடுகளில் அடையாளம் தெரியாதவர்கள் சேதம் விளைவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - சுண்டுக்குளி பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இனந்தெரியாத நபர்களினால் எரியூட்டப்பட்டுள்ளன. வீட்டின் கண்ணாடிகளும் நொறுக்கி சேதமாக்கப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள்களுக்கு வைக்கப்பட்ட தீ வீட்டிற்கும் பரவியதில், அங்கிருந்த தளபாடங்களும் எரிந்து நாசமாகியுள்ளன. இன்று அதிகாலை 1.40 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, திருநெல்வேலி - கலட்டி சீனியர் லேன் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீட்டின் யன்னல்கள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட வீட்டின் தளபாடங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். நேற்று இரவு 9 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பிலும் யாழ். பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.