Colombo (News 1st) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தமை தொடர்பில் இன்றும் பாராளுமன்றத்தில் வாதப்பிரதிவாதம் இடம்பெற்றது.
இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் மீண்டும் கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்ததாவது,
1982 ஆம் ஆண்டில் செல்வராசா யோகச்சந்திரன் என்கிற குட்டிமணி தமிழர் விடுதலைக்கூட்டணியினால் பாராளுமன்ற உறுப்பினராக பெயரிடப்பட்டார். அவரின் பெயரை பாராளுமன்ற உறுப்பினராக தேர்தல்கள் ஆணையாளர் வர்த்தமானியில் அறிவித்தார். சபாநாயகருக்கும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் அது அனுப்பப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர் மரண தண்டனை விதிக்கப்பட்டவராவார். அந்த உறுப்பினர் மேன்முறையீடு செய்தபோது, அப்போதைய சபாநாயகர் அவர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. குறிப்பாக அரசியலமைப்பின் 89 மற்றும் 91 சரத்துகளுக்கமைய அந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. பாகீர் மாக்கார் சிறந்த முன்னுதாரணத்தை வழங்கியுள்ளார். உங்களிடம் நான் வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறேன். அந்த முன்னுதாரணத்திற்கு மாறாகவே நீங்கள் அரசியலமைப்பின் 89 மற்றும் 91 ஆம் சரத்துகளை மீறி சில தினங்களுக்கு முன்னர் அந்த தீர்மானத்தை எடுத்தீர்கள். அந்த தீர்மானத்தினால் 89 மற்றும் 91 ஆம் சரத்துகள் மீறப்பட்டுள்ளன என்பதை கவலையுடன் கூறுகின்றேன்.
என குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கமைய தாம் செயற்பட்டதாகக் கூறினார்.
எனினும், நீதிமன்றம் தொடர்பில் விமர்சிக்க முற்படவில்லை என குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, 89 மற்றும் 91 ஆவது சரத்துகளுக்கு அப்பால் அரசியலமைப்பொன்று இந்த நாட்டில் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.