ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

சதொச ஊழியர் விவகாரம்: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

by Staff Writer 11-09-2020 | 3:38 PM
Colombo (News 1st) அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதிக்கு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று ஒத்திவைத்தார். 2010, 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சதொச ஊழியர்கள் 153 பேரை, அவர்களின் உத்தியோகபூர்வ கடமையில் இருந்து விலக்கி வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசாங்கத்திற்கு 4 கோடி ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு தொடரப்பட்டுள்ளமைக்கு எதிராக தமது சேவை பெறுநரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து சந்தேகநபர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பிரதம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் செயற்பாட்டு பணிப்பாளரான மொஹிதீன் சாகி ஆகியோர் வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாவர்.