ஆறுமுகன் தொண்டமான் பயங்கரவாதத்தை ஒழிக்க அரசாங்கத்திற்கு ஆதரவளித்ததாக பிரதமர் தெரிவிப்பு

by Staff Writer 11-09-2020 | 6:01 PM
Colombo (News 1st) அமரர் ஆறுமுகன் தொண்டமான், நாட்டைப் பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக செயற்பட்டதுடன், அனைத்து சந்தர்ப்பங்களிலும் பயங்கரவாதத்தை ஒழிக்க அரசாங்கத்திற்கு ஆதரவளித்தார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். பிரதமர் மேலும் தெரிவித்ததாவது,
ஆறுமுகம் தொண்டமானின் மறைவு அனைத்து பெருந்தோட்ட மக்களுக்கும் தனிப்பட்ட ரீதியில் எனக்கும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்திய சம்பவமாகும். அவரது உயிர் பிரிவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் கூட என்னை சந்தித்தார். அந்த சந்திப்பின் போதும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் மேம்பாடு, அவர்களின் இடர்களைக் களைவது தொடர்பிலேயே கலந்துரையாடினார். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த ஆறுமுகன் தொண்டமான், தோட்ட மக்களிடையே பயங்கரவாத சித்தாந்தங்கள் தோற்றம் பெற இடமளிக்கவில்லை. முப்பது ஆண்டுகால யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவரும் மனிதாபிமான போராட்டத்திற்கு அது பெரும் ஆதரவாக அமைந்தது. ஆறுமுகன் தொண்டமான், அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டைப் பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக செயற்பட்டது மாத்திரமின்றி பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாடுகளுக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டார். நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அவரது அந்த ஜனநாயகப் பண்புகள் தீர்க்கமான தாக்கம் செலுத்தின
என குறிப்பிட்டார்.