வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கனடாவில் மற்றுமொரு நடை பவனி 

by Staff Writer 10-09-2020 | 7:50 PM
Colombo (News 1st) இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கனடாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் நெடுநடைப் பயணத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் மற்றுமொரு நடைபவனி கனடாவில் ஆரம்பமாகியுள்ளது. இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரிய நெடுநடைப் பயணம் கனடாவின் மாண்ட்ரியலில் இருந்து ஒட்டாவா நோக்கி முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த 30 ஆம் திகதி ஒன்டாரியோவின் ப்ரம்டன் நகரில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஆரம்பமான நெடுநடைப் பயணத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நடை பயணம் முன்னெடுக்கப்படுகின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான கடந்த 30 ஆம் திகதி பிரம்ரன் நகரில் இருந்து இந்த நடை பயணம் ஆரம்பமானது. எதிர்வரும் 14ஆம் திகதி கனேடிய தலைநகர் ஒட்டாவாவை இவர்கள் சென்றடையவுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மகஜர் ஒன்றையும் கையளிக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு, சர்வதேசமும் கனேடிய அரசாங்கமும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என இவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதேவேளை, வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்று (09) முன்னெடுத்தனர். தமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 1300 நாள் பூர்த்தியை முன்னிட்டு இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்க அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் முன்வர வேண்டும் என இதன்போது கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.