புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கு பிரதமர் அழைப்பு

அச்சமின்றி இணைந்து பணியாற்ற வருமாறு புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கு பிரதமர் அழைப்பு

by Staff Writer 10-09-2020 | 5:10 PM
Colombo (News 1st) எவ்வித அச்சமும் இன்றி இணைந்து பணியாற்ற வருமாறு புலம்பெயர்வாழ் இலங்கையர்களிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளார். புலம்பெயர் முதலீட்டாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இந்த அழைப்பை விடுத்துள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக்காலத்தில் இலங்கையில் பல முதலீடுகளை மேற்கொள்ள வருகை தந்த புலம்பெயர் இலங்கையர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பில் தாம் நன்கறிந்துள்ளதாக பிரதமர் இதன்போது கூறியுள்ளார். குறிப்பாக இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு உள்ளூர் முகவர்களினால் தரகுப்பணம் பெற முற்பட்டமை, அதனால் பலர் நாட்டிலிருந்து வௌியேறிமை தொடர்பில் தாம் வேதனையடைவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தமது அரசு புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கான முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகக் கூறியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, தரகுப்பணம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகள் நிலவுமாக இருந்தால், அது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகங்களுக்கு நேரடியாக அறிவிக்க முடியுமெனவும் தெரிவித்துள்ளார். இலங்கையை உலகம் திரும்பி பார்க்கும் நாடாக மாற்றுவதற்கு அனைவரும் கைகோர்த்து பயணிக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் இதன்போது வலியுறுத்தியதாக பிரதமர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.