கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டது

New Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டது

by Staff Writer 09-09-2020 | 8:57 AM
Colombo (News 1st) MT New Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இன்று (09) அதிகாலை 1 மணி முதல் கப்பலுக்கு புகை விசுறும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, கப்பல் தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளளை எடுப்பதற்கு கடற்படையின் இடர்முகாமைத்துவ குழு இன்று New Diamond கப்பலுக்கு செல்லவுள்ளது. New Diamond கப்பல் உள்ள பகுதியிலிருந்து கடல் நீர் மாதிரி கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சமுத்திரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து பரிசோதிப்பதற்காக சென்ற விசேட குழுவினரால்கடல் நீர் மாதிரி கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த கடல் நீர் மாதிரி இன்று (09) அரச இரசாயன பகுப்பாயிவிற்கு அனுப்பப்படவுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார். இந்த பரிசோதனையின் மூலம் சமுத்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உறுதியாக கூற முடியும் என சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, New Diamond கப்பலை நேற்றைய தினம் மேலும் 9 கடல் மைல் தொலைவிற்கு நகர்த்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், குறித்த கப்பல் 37 கடல் மைல் தொலைவில் காணப்படுகின்றது. எவ்வாறாயினும் குறித்த கடற்பிராந்தியம் கொந்தளிப்பாக காணப்படுவதாகவும் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.