கட்சிகளை பதிவு செய்யும் 2ஆவது நேர்முகப்பரீட்சை

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் இரண்டாவது நேர்முகப்பரீட்சை இன்று

by Staff Writer 09-09-2020 | 7:45 AM
Colombo (News 1st) புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் இரண்டாவது நேர்முகத்தேர்வு இன்று (09) நடைபெறவுள்ளது. இதனடிப்படையில், முதலாவது நேர்முகப்பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட 20 கட்சிகளுக்கு இன்று இரண்டாவது நேர்முகத்தேர்வு இடம்பெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. பதிவிற்காக விண்ணப்பித்த 159 புதிய அரசியல் கட்சிகளில், 20 கட்சிகள் தெரிவு செய்யப்பட்டதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. தொடர்ச்சியாக 4 வருடங்கள் அரசியலில் ஈடுபட்டிருத்தல், கட்சியை நடாத்திச் செல்வதற்கான நிதி கையிருப்பில் இருத்தல் உள்ளிட்ட பல காரணிகள், புதிதாக பதிவு செய்யப்படும் அரசியல் கட்சிகளுக்கு தேவையான விடயங்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இன்று நடைபெறவுள்ள இரண்டாவது நேர்முகத்தேர்வின் பின்னர், தெரிவு செய்யப்படும் அரசியல் கட்சிகளின் பெயர்கள் எதிர்வரும் நாட்களில் வௌியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 5 வருடங்களின் பின்னரே இவ்வாறு புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படுதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. இதேவேளை, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது.