இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலைக் கண்டித்து பேசாலை மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

by Staff Writer 09-09-2020 | 6:43 PM
Colombo (News 1st) இலங்கை கடல் வளத்தை சுரண்டி அழிக்கும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து, மன்னார் - பேசாலை கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். பேசாலை கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டம் இன்று காலை 8.45 அளவில் ஆரம்பமானது. பேசாலை கிராமத்திலுள்ள சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு, மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லாமல் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அருட்தந்தையர்கள்,பேசாலை கிராம மக்கள், மீனவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றிருந்தனர். 30 வருட கால யுத்தத்தின் போது தாம் அனுபவித்திராத பல்வேறு பிரச்சினைகளை தற்போது எதிர்நோக்குவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய வருகையின் காரணமாக கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இலங்கைக்கு கொண்டுவரப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டினர். இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயற்பாட்டினால் மன்னார் மாவட்ட மீனவர்கள் தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.