தேயிலை தொழிற்றுறையை மேம்படுத்த வேண்டும் - ஜனாதிபதி

தேயிலை தொழிற்றுறையை மேம்படுத்த வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தல் 

by Staff Writer 08-09-2020 | 8:41 AM
Colombo (News 1st) பின்னடைவுக்குள்ளாகியுள்ள தேயிலை தொழிற்றுறையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார். தொழில்துறையின் வீழ்ச்சிக்கான காரணிகளை அடையாளம் காண்பதுடன், உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு காணப்பட்ட கேள்வியை மீண்டும் அதிகரிப்பதை இலக்காகக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தோட்டங்களை மறுசீரமைத்தல், தேயிலை தோட்டங்களை அண்மித்த பகுதியில் பயிர்ச்செய்கை முன்னெடுத்தல், தேயிலை தொழிற்சாலைகளை நவீனமயமாக்கல் மற்றும் தேயிலை ஏற்றுமதி மேம்பாடு தொடர்பிலான இராஜாங்க அமைச்சின் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (07) கலந்துரையாடப்பட்டது. இதன்போதே ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸ இந்த விடயங்களை முன்வைத்துள்ளார். நட்டம் ஏற்படுவதற்கான காரணிகளை அடையாளம் கண்டு குறுகிய காலத்தில் அதற்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார். பின்னடைவுக்குள்ளான தேயிலை தொழிற்றுறையை மேம்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.