கலிபோர்னியாவில் 2 மில்லியன் ஏக்கர் பகுதி தீக்கிரை

கலிபோர்னியாவில் வரலாறு காணாத அளவிலான ஏக்கர் பகுதி தீக்கிரை

by Staff Writer 08-09-2020 | 12:28 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வரலாற்றில் பதிவாகாத அதிகளவு ஏக்கர் நிலப்பரப்பு இவ்வருடம் காட்டுத்தீயால் எரிந்து நிர்மூலமாகியுள்ளது. கலிபோர்னியா மாநிலம் முழுவதிலும் பாரிய சுவாலையுடன் பற்றியெரியும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக, தீயணைப்பு வீரர்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 2 மில்லியனுக்கும் அதிகமான ஏக்கர்கள் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதாக கலிபோர்னிய வனவள மற்றும் தீ பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் கலிபோர்னியாவில் பாரிய வெப்ப அலை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. லொஸ் ஏஞ்சலெஸ் நகரில், வரலாற்றில் மிகவும் அதிகமான வெப்பநிலையான 49.4 பாகை செல்சியஸ் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. இருப்பினும் இந்த வெப்பநிலை இன்றிலிருந்து குறைவடையும் எனவும் காற்று அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க தேசிய காலநிலை சேவைகள் நிலையம் எதிர்வுகூறியுள்ளது. கலிபோர்னிய மாநிலத்தில் ஏற்பட்டுள்ள 24 வெவ்வேறு காட்டுத் தீயை அணைப்பதற்காக 14,000 இற்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.