கப்பலில் பரவிய தீ ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

MT New Diamond கப்பலில் பரவிய தீ ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

by Staff Writer 05-09-2020 | 3:40 PM
Colombo (News 1st) MT New Diamond கப்பலில் பரவிய தீ ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன், கப்பலின் ஏனைய பகுதிகளுக்கு தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 11 கப்பல்கள் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார். குறித்த கப்பல் ஆழமற்ற கடற்பகுதிக்கு இழுத்துச்செல்லப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது. கப்பலில் ஏனைய பகுதிகளுக்கு தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், கப்பலில் பரவிய தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை என விமானப் படை பேச்சாளர் குருப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார். தீயைக் கட்டுப்படுத்துவதற்கு MI17 ரக ஹெலிகொப்டர் தயார் நிலையிலுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, கப்பலில் பரவிய தீயைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கப்பலின் உரிமையாளர், காப்புறுதி நிறுவனம் மற்றும் மீட்புக்குழுவிடம் கலந்துரையாடுவதாக வர்த்தக் கப்பல் செயலக அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பனாமா அரசாங்கத்துடனும் கலந்துரையாடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.